home

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கேள்விகள்

  1. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்பது என்ன?

  2. மேம்பாடு என்பது என்ன?

  3. திட்ட அனுமதி என்றால் என்ன?

  4. திட்ட அனுமதியினைப் பெறுவது எப்படி?

  5. திட்ட அனுமதி விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?.

  6. நீங்கள் திட்ட அனுமதி விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

  7. எதன் அடிப்படையில் திட்ட அனுமதி அங்கீகாரம் கொடுக்கப்படுகின்றது?

  8. மனை நேராய்வு செய்யப்படுமா?

  9. திட்ட அனுமதி விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்க எவ்வளவு காலம் பிடிக்கும்?

  10. திட்ட அனுமதிப் பரிசீலனையின் முடிவு உங்களுக்கு பாதிப்பளிப்பதாகக் கருதிவீர்களானால் உங்களுக்குள்ள உரிமை என்ன?

  11. நீங்கள் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை எனில் உங்களுக்கு என்ன நேரிடும்?

  12. கட்டிட உரிமத்திற்கான கட்டணம்/வளர்ச்சிக் கட்டணம் நீங்கள் செலுத்த வேண்டுமா?

  13. மேம்பாட்டாளர் என்ற நிலையில் உங்களுக்குள்ள கடமை என்ன?

பதில்கள்

  1. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தமிழக அரசின் சட்டப்பூர்வமான அதிகாரம் பெற்ற நிறுவனம். சென்னைப் பெருநகர்ப் பகுதியில் திட்டமிட்டபடி வளர்ச்சியினை வரன்முறைப்படுத்துவது இதன் முக்கியப் பொறுப்பாகும். இந்த செயல்பாட்டிற்காகச் சென்னைப் பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் அனுமதிக்கப்படும் நில உபயோகத்தை நிர்ணயிக்கின்ற முழுமைத் திட்டத்தினை இக்குழுமம் தயாரித்துள்ளது.

  2. 1971-ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின்படி ஏதாவதொரு கட்டிடத்தைக் கட்டுவது, கட்டுமானப் பொறியியல் பணிகளை மேற் கொள்வது, தவிர மனையில், மனைக்குமேல், மனைக்கு கீழ் முழுமைத் திட்டத்தின் ஒரு பகுதியான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் தெரிவித்துள்ள உபயோகத்தில் வேறு மாற்றங்களை உள்ளாக்குவது, உட்பட மற்ற இதர தொடர்புடைய பணிகளை மேற் கொள்வது மேம்படுத்துதல் என பொருள்படும்.

    சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் (2004 செப்டம்பர் வரை திருத்தியவாறு) காண இங்கு சொடுக்கவும்

  3. எந்தவொரு மேம்பாட்டினை மேற்கொள்ளுமுன் நீங்கள் அதற்கான திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அவசியமானது. திட்ட அனுமதி கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்களுக்குச் செல்லத்தக்கதாகும். ஒரு தடவை கொடுக்கப்பட்ட திட்ட அனுமதியின் காலத்தை மேலும் 3 வருடங்களுக்கு புதுப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு அதன் செல்லத்தக்க காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  4. இரண்டு வகையான விண்ணப்பப் படிவங்கள் உள்ளன. மனைப்பிரிவு விண்ணப்பத்திற்கு படிவம் ‘அ’, மற்ற வளர்ச்சிகளுக்கான விண்ணப்பத்திற்கு படிவம் ‘ஆ’. மேற்காணும் திட்ட அனுமதி விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலகங்கள் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலகத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

    மேற் சொன்ன விண்ணப்ப படிவங்களைக் கணிணியில் இறக்கி நகல் எடுக்க இங்கு சொடுக்கவும்

  5. விண்ணப்பபடிவத்துடன் கீழ்காணும் தகவல்களை காட்டும் 5 வரைபடங்கள்

    • வரைபடங்கள்

      • தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள மனையின் அளவுகள் அதில் அமையவுள்ள கட்டிடத்தின் அமைப்பு பற்றிய தெளிவான விபரங்கள் குறிப்பாக தெரிவிக்கும் இடைவெளி அளவுகள் கொண்ட வரை படம்.

      • உத்தேசித்துள்ள கட்டிடத்தின் தரைப்படம், பக்கவாட்டுத் தோற்றம், வெட்டுத் தோற்றத்தின் விவரங்கள், நடப்பு கட்டுமான (ஏதேனும் இருப்பின்) விவரங்கள், புதிய உபயோகம் அல்லது வேறு உபயோக மாற்றத்திற்கான கோரிக்கை இருப்பின் அது தொடர்பான முழு விவரங்கள்.

      • மனையின் அமைவிடத்தை காட்டும் வழிகாட்டும் வரைபடம், இவ்வரைபடங்கள் மற்றும் விண்ணப்பத்தில் மனுதாரர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினால் அனுமதி பெற்ற கட்டிட வரையாளர், நில அளவையாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

    • சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளிடமிருந்து தீர்மானத்திற்கான ஒப்புதல் கடிதம்.

    • மனையின் உரிமையை நிலைநாட்ட உதவும் கிரயப்பத்திர ஆவணம் / குத்தகைப்பத்திர ஆவணம், மற்றும் பட்டா முதலிய ஆவணங்கள்.

      குழுமம் அளித்துவரும் சேவைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்களுக்கான விளக்கம் பெறுவதில் சிக்கல் இருப்பின் பொது தகவல் அலுவலரை உதவிக்கு சந்திக்கவும்.

      பொதுத் தகவல் அலுவலர்களின் பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்

  6. சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் சென்னை மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் திட்ட அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

  7. முழுமைத்திட்டத்தில் தங்களது மனை அமைந்துள்ள நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நில உபயோகம் மற்றும் உத்தேசித்துள்ள உபயோகத்திற்கான வளர்ச்சிக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்ற அடிப்படையில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

    வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை காண இங்கு சொடுக்கவும்

    உங்களின் விண்ணப்பம் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக இருப்பின் திட்ட அனுமதி வழங்கப்படும், இல்லாவிடில் உள்ளாட்சி நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். சில பெரிய வளர்ச்சிக்கான விண்ணப்பங்கள் மட்டும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

  8. விண்ணப்பத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் மனை அமையும் இடத்தைப் பொறுத்து, குழுமத்தின் அலுவலர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள்/நகர் திட்டமிடல் அலுவலர் அல்லது பொறியாளர், கட்டிட வரைபட அளவையாளர் ஆகியவர்களினால், நிச்சயமாக எல்லா மனைகளும் நேராய்வு செய்யப்படும்.

  9. சில விதிவிலக்குகள் தவிர, மற்ற அனைத்து விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 45 வேலை நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.

  10. உள்ளாட்சி அமைப்பு அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் உங்கள் திட்ட அனுமதி விண்ணப்பம் மறுக்கப்பட்டால், நீங்கள் அரசின் வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சித்துறைக்கு மேல் முறையீடு செய்யலாம்.

  11. திட்ட அனுமதி பெறாமல் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டாலும், அவை அங்கீகாரம் பெறாத வளர்ச்சிகளாக கருதப்பட்டு, சட்ட விதிகளின்படி அனுமதி பெறாத அக்காட்டுமானங்களை இடிக்கவும் முடியும்.

    அங்கீகாரம் பெற்ற வரைபடத்தை மீறிக் கட்டுமானம் இருப்பின் இம்மாறுபாடுகளைத் தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இங்கு அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தை விட்டு விலகிச் சென்று கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை, தெளிவாக காட்டும் திருத்திய வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். சாதாரணமாகத் திட்ட அனுமதி பெற விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பொழுது கையாளப்படும் பரிசீலனை நடைமுறைகளே இதற்கும் கையாளப்படும்.

  12. உங்களுடைய விண்ணப்பம் அங்கீகாரம் அளிக்க தகுதியுள்ளது என்ற நிலை வந்தவுடன் வளச்சிக் கட்டணம் செலுத்த வேண்டியது பற்றிய கேட்புக் கடிதம் உங்களுக்கு அனுப்பப்படும். உத்தேசித்துள்ள உபயோகம் மற்றும் தளங்களின் பரப்பளவிற்கு ஏற்ப கட்டணங்களின் தொகை இருக்கும்.

  13. மேம்பாட்டாளர் என்ற முறையில் நீங்கள் எந்தவொரு வளர்ச்சிப் பணிக்கும் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட திட்ட அனுமதியில் தெரிவிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள் வளர்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்.